Saturday, August 23, 2014

கடைசியில்



இரவு 12 மணி 
இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது,
ஒவ்வொருவருக்கும் காலையில் கண்விழிக்கும் போது தான் அந்த விபரீதத்தின் விளைவு தெரியும், அது வேறொன்றும் இல்லை 
மக்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகரித்துவிட்டதால் மக்களை அந்த பைத்தியத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்திற்காக 
இத்தனை வருடங்கள் 
நாம் சேர்த்து வைத்த பணமெல்லாம் இன்று நள்ளிரவு முதல் வெறும் காகிதங்களாகவே கருதப்படும், அவற்றிற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது,
என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது,
தங்கம் மட்டும் எப்போதும் போல் ஒரு விலைமதிப்புமிக்க உலோகமாக கருதப்படும்!
இந்த அறிவிப்பு தெரியாமல் எல்லா மக்களும் கொறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்!
வழக்கம் போல் நம் தாய்குலங்கள் எல்லாம் தலையை சொறிந்தபடி காலை ஐந்து மணிக்கு காபிபோட பால்பாக்கெட்டை தேடி வாசலுக்கு வர காம்பௌன்ட் கேட்டில் வெறும் பை மட்டும்தான் தொங்குகிறது பாலை காணோம், பால்காரனுக்கு போனை போட, இனிமே பணம் சம்பாதித்து என்ன பண்ணபோறோம் அதான் பால் போடல,
போய் நியூஸ் பாருங்க என்றதும் tv யை on பண்ண பொதிகை மட்டும் தான் வேலை செய்கிறது,
Private channels எல்லாம் மூடப்பட்டு விட்டன பேப்பர்காரனும் வரவில்லை,
இந்த தகவல் பரபரப்பாக நாடு முழுவதும் பரவியது
உறவினர்களுக்கு தகவல் சொல்ல போனை எடுக்க எந்த போனும் வேலை செய்யவில்லை
bsnl ம் std booth களும் மட்டும் தான் வேலை செய்கின்றன,
இனிமேல் பணத்திற்கு மதிப்பு இல்லையென்றால்
எதைக்கொடுத்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவது,?!
மக்கள் எல்லோரும்
super market, மளிகை கடைக்காரனை போய் பார்க்க எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிகிட்டோம், என்று உணவுப்பொருட்களை
பதுக்கிக்கொண்டார்கள்,
வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட நாடுமுழுவதும் உணவுப்பொருட்களை
தேடி ஓட ஆரம்பித்தார்கள்
IT company கள், தொழிற்சாலைகள்,
சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள்,
எல்லாம் மூடப்பட்டுவிட்டன
கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன, அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப்பட்டது
பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு
10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது,
எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்
ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும்
மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும்
மாதக்கட்டணமாக தங்கம் பெறப்பட்டது,
நகரம் முழுவதும் ரிக்சா, குதிரை வண்டி, மாட்டுவண்டி போன்றவை புழக்கத்திற்கு வந்தது,
நாடே போர்க்களம்போல் அல்லோலப் பட்டுக்கொண்டு இருக்க விவசாயிகள் மட்டும் எந்தவித பதட்டமோ சலனமோ இன்றி எப்போதும் போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்கு சென்றுகொண்டு இருந்தார்கள்!
வாரச்சந்தைகளில் விவசாயிகளிடம்
அரிசி பருப்பு வாங்க
நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள்,
உணவுப்பொருட்களுக்காக பங்களா கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது,
வேலைதேடி எல்லோரும் கிராமங்களுக்கு செல்ல மூன்றுவேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் சம்பளமாக வழங்கப்பட்டது
ஒட்டுமொத்த தனியார் கல்விநிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின,
Bank கள் எல்லாம் ஆடுமாடுகள் கட்ட பயன்படுத்தப்பட்டன, வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் வாங்க மட்டுமே தங்கம் பயன்படுத்தப்பட்டது அரசுக்கு தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாக பெற்றார்கள், விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் எல்லாம் கிலோ கணக்கில் நகை அணிய ஆரம்பித்தார்கள், கார், பங்களா, சுற்றுலா, என ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள், நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும்
அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது
வாகனங்களால் ஏற்படுத்தப்பட்டு
காற்றை அசுத்தப்படுத்திய புகைமண்டலம் நாளாக நாளாக குறைய
உலக வெப்பமயமாதல் குறைந்து
பருவமழை தவறாமல் பெய்யத்துவங்கியது
வறண்டபூமியெல்லாம் தவறாது மழை பெய்ததினால் விவசாய நிலங்களாக மாறின,
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உணவுப்பொருட்கள் போதுமான அளவு கிடைத்ததால் மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன!
பணத்தின் மீதான மோகம் காணாமல் போனதாலும்,
tv, mobile, internet, போன்றவைகளை இழந்ததாலும்
உறவுகளின் வலிமை புரியத்தொடங்கியது
அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, என ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் தெரிய ஆரம்பித்தது,
பக்கத்து வீட்டின் சுக துக்கங்கள் நம்மையும் பாதிக்க தொடங்கியது,
பணம் எனும் மாயவலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை,
மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப்பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது,
எல்லாம் இருந்தும்
எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்த
மக்களை மகிழ்விப்பதற்காக
ரஜினி, கமல்,
அஜித், விஜய் எல்லாம் கிராமங்கள் தோறும் நாடகம் நடத்தி அரிசி பருப்பு வாங்கிச்சென்றார்கள் திருவிழா காலங்களில் த்ரிஷா நயன்தாராவின் கரகாட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது
ஆனாலும் அவர்களால் நமிதாவிடமும் அனுஷ்காவிடமும் போட்டிபோட முடியவில்லை
என்பது வருந்தத்தக்க செய்தி!
காரணம் தேடி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது
அவற்றை வெளியிட எப்போதும் போல் சென்ஸார் போர்டு அனுமதி மறுத்துவிட்டது!
அதனால்,
தயவு செய்து கரகாட்டத்தையும்
குறட்டையையும் நிறுத்திவிட்டு
கொஞ்சம் கண்விழித்து பாருங்கள் இது கனவுதான்!
ஆனால் எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை
சில கனவுகள்
நம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை
இந்த கனவும் அப்படித்தான
கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள் போல்தான்
காசும் காகிதத்திற்குள் ஒளிந்திருக்கிறது,
கடவுளை கல்லென்று வாதிக்கும் மேதாவிகள் கூட, காசை காகிதம் என்று ஒப்புக்கொள்ளவதில்லை காரணம் பணம் என்பது எந்த மனதையும் மண்ணாக்கும் மாயப்பேய்!
பணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்கவேண்டுமே ஒழிய
பணத்திற்கு நாம் அடிமையாகக்கூடாது


Thanks - Ashokkumar